வளவன் ஆறாம் வகுப்பு படிக்கின்றான். அவன் வீடு இருந்த தெருவில் ஒரு நாய் நான்கு குட்டிகள் போட்டது. அவற்றுள் வெள்ளையும் கறுப்பும் கலந்த, ஒரு நாய்க்குட்டி இருந்தது. அது புஸ் புஸ்ஸென்று, மிகவும் அழகாக இருந்தது. வளவனுக்கு அந்த நாய்க்குட்டியை, மிகவும் பிடித்து இருந்தது.
“இந்த நாய்க்குட்டியை, நம்ம வீட்டுல வைச்சி, வளர்க்கலாமா?” என்று வளவன் அம்மாவிடம் ஆசையாகக் கேட்டான். “வேணாம்பா. அதுக்கு வெறிநாய்க்கடி போடணும்; யாரையாவது கடிச்சி வைச்சா, உயிருக்கு ரொம்ப ஆபத்து; தினமும் குளிப்பாட்டிச் சுத்தமா வைக்கணும்;
அதெல்லாம் தேவையில்லாத வேலை” என்று அம்மா மறுத்து விட்டார். வளவனுக்கு அதில் ரொம்ப வருத்தம். பல முறை கெஞ்சிப் பார்த்தும் அம்மா அதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.
ஆனால் வளவன் தினமும் நாய்க்குட்டிக்குச் சோறு போட்டதற்கு, அம்மா மறுப்பு ஏதும் சொல்லவில்லை. வளவன் அதற்கு ‘ஜிம்மி’ என்று பெயர் வைத்தான். தெருவில் விளையாடும் போது, ஜிம்மியும் அவனோடு சேர்ந்து, ஓட்டப்பந்தயம் ஓடும்.
அவனைப் பார்த்தாலே, வாலை வேக வேகமாக ஆட்டி, ஏதேதோ பேசும். அவன் தொப்பியைத் தூரத்தில் போட்டு விட்டு, “ஜிம்மி! போய் எடுத்து வா” என்பான்.
ஜிம்மி ஓட்டமாக ஓடிப் போய், வாயில் கவ்வி எடுத்து வந்து கொடுக்கும்.
அவன் பள்ளி விட்டு வந்தால், தெருமுனையில் இருந்து அவன் வீடு வரைக்கும்,
பாதுகாப்பாளன் போல் கூடவே வரும். ஜிம்மி இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டது.
“தெருநாயா இருந்தாலும் இதுக்கு நல்ல அறிவுடா” என்று வளவனின் நண்பர்கள் புகழ்ந்தார்கள்.
அதைக் கேட்டு, அவனுக்குப் பெருமை தாங்கவில்லை.
ஒரு ஞாயிறு அன்று, வளவனுக்குப் பொழுதே போகவில்லை.
அம்மாவின் கைபேசியை வைத்துக் கொண்டு, ஏதோ பார்த்துக் கொண்டு இருந்தான். “என்னடா?
காலையிலேர்ந்து எவ்ளோ நேரமா செல்போனை நோண்டிக்கிட்டு இருக்கே?
ஃபோனை கொடு; வெளியில பசங்களோடு போய் விளையாடு” என்று அம்மா திட்டினார்.
அவனிடம் இருந்து கைபேசியையும் பிடுங்கி விட்டார். அவனுக்கு விளையாடப் பிடிக்கவில்லை.
அவன் சுவாரசியமான ஒரு கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அம்மா பாதியில் பிடுங்கிவிட்டதால் அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.
எழுந்து நேரே அறைக்குப் போனான்.
அங்கே ஒரு இரும்பு பீரோ இருந்தது.
பீரோவுக்கும், சுவருக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி இருந்தது.
அந்த இடைவெளியில், ஒண்டிக் கொண்டு உட்கார்ந்தான். அம்மா கொஞ்ச நேரம் தன்னைக் காணாமல் தேடட்டும் என்று நினைத்தான். காதைத் தீட்டி வைத்துக் கொண்டு, காத்து இருந்தான். ஆனால் அம்மாவோ மும்முரமாக ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தார். அவனைத் தேடவே இல்லை. கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தவன், சுவரில் சாய்ந்து தூங்கி விட்டான். அரை மணி நேரம் கழித்துத் தான், அம்மா அவனைத் தேட ஆரம்பித்தார். அவன் விளையாட வெளியே சென்று விட்டான் என அம்மா நினைத்து இருந்தார். மாலை இருட்டத் துவங்கியதும், வாசலுக்குப் போய்த் தேடிப் பார்த்தார். பக்கத்து வீடுகளுக்குச் சென்று விசாரித்தார். வளவனை வெளியில் பார்க்கவே இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.
அம்மாவுக்குப் பயம் வந்துவிட்டது. செல்ஃபோன் கொடுக்கவில்லை என்ற கோபத்தில், எங்காவது போய் விட்டானோ எனக்கவலைப்பட்டார். வீடு முழுக்க, மீண்டும் தேடினார். பீரோவுக்குப் பின்னால், அவன் ஒளிந்து இருப்பான் என்று அவருக்குத் தோணவே இல்லை.
வளவனின் அப்பாவுக்கு, ஃபோன் செய்து விபரத்தைச் சொன்னார். “பயப்படாதே! அங்க தான் எங்கியாவது இருப்பான்” என்றார் அப்பா. மீண்டும் அவர் வாசலுக்கு வந்த போது, ஜிம்மி அங்கே வாலாட்டிக் கொண்டு நின்றது. “ஏய் ஜிம்மி! உன் ஃபிரெண்டு வளவனைக் காணோம்;
எங்கியாவது பார்த்தியா?” என்று அம்மா கேட்டார். அடுத்த நொடி அம்மா கேட்டதைப் புரிந்து கோண்டது போல், ஜிம்மி அவரைத் தள்ளிக்கொண்டு, வீட்டுக்குள்ளே ஓடியது. பீரோவுக்குப் பின்பக்கம் போய் நின்று, “லொள்! லொள்” என்று குரைத்தது. ‘அங்க போய் ஏன் குரைக்குது?’ என்ற சந்தேகத்துடன், அம்மா ஓடி வந்து பார்த்தார். வளவன் அங்கே தூங்கிக் கொண்டு இருந்தது,
அப்போது தான் அவருக்குத் தெரிந்தது. ஜிம்மி கத்துவதைக் கேட்டு, வளவனுக்கும் விழிப்பு வந்தது. அவனும் எழுந்து வெளியே வந்தான். காற்று இல்லாமல், அவன் உடம்பு தொப்பலாக வேர்வையில் நனைந்து இருந்தது. “இதுக்கு நல்ல மோப்ப சக்தி; நல்ல அறிவுடா! நான் கேட்டதைப் புரிஞ்சிக்கிட்டு, உன்னைக் கண்டுபிடிச்சிக் கொடுத்துட்டுது” என்று அம்மா ஜிம்மியைப் புகழ்ந்தார்.
அன்று முதல் அம்மாவும் ஜிம்மி மீது, பாசமாக இருக்க ஆரம்பித்தார். வளவனின் அப்பா ஜிம்மியை விலங்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, நோய் வராமல் இருக்கத் தடுப்பூசிகள் போட்டார். தெருநாயாக இருந்த ஜிம்மி, அன்று முதல் அவர்கள் வீட்டுச் செல்லப் பிராணியாக மாறியது.